
இன்று வரை எமது காணிகள், வீடுகள் விடுவிக்கப்படவில்லை என யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் தையிட்டி ஜெ/249 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த தம்பையா நடராசா யாழ் ஊடக அமையத்தில் கருத்து தெரிவிக்கையில்:
1990 ஆம் ஆண்டு போர் காரணமாக நாம் இடம்பெயர்ந்தோம். அதன் பின்னர் எமது சொந்த இடங்களுக்கு வந்தோம். அப்போது அங்கே எமது வீட்டில் இராணுவத்தினர் குடியிருந்தனர். இது எங்களின் வீடு, வேறு இடமும் இல்லை தாருங்கள் என கேட்டோம்.
வீட்டை தருகின்றோம் என்று கூறியவர்கள் பல வருடங்களாக வீட்டை தரவில்லை. அதன் பின்னர் உரிய அதிகாரிகளுக்கும் கடிதங்களையும் அனுப்பினோம். அரச அதிபர் ஊடாக எனக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
உங்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என்று. இப்போது வரையில் நாம் இரவல் வீட்டிலேயே இருக்கின்றோம். ஆகவே எமது காணிகள், வீடுகள் விடுவிக்கப்பட வேண்டும். எமது காணியில் நாங்கள் இல்லை. ஆனால் இன்று இராணுவத்தினர் எமது காணிக்குள் மரங்களை நடுகின்றனர். எங்கள் வீட்டை நாம் தள்ளி நின்று ஏக்கத்துடன் பார்த்து வருகின்றோம்.- என்றார்.