
உக்ரைன் தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டு தொடர்ந்து உக்கிர தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்நகரில் மட்டும் 10,000 பேர் வரை இறந்திருக்கலாம் என மனிதாபிமான திட்டங்களுக்குப் பொறுப்பான உக்ரைன் ஜனாதிபதி ஆலோசகரான லோமகினா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலால் மரியுபோல் நகரில் கொல்லப்பட்ட சுமார் 5,000 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.
ஆனால் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால் இறந்தவர்களின் உடல்களை தேடி அடக்கம் செய்யும் பணிகள் 10 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்தப் 10 நாட்களில் எத்தனை பேர் இறந்தனர்? என்று தெரியாது. அத்துடன், உயிரிழந்த பலரது உடல்கள் கட்டட இடிபாடுகளுக்குள் மீட்க முடியாது சிக்கியுள்ளன.
எனவே, இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை மதிப்பிட முடியாதுள்ளது. 10 ஆயிரம் பேர் வரை மரியுபோலில் மட்டும் இறந்திருக்கலாம் என மதிப்பிடுவதாகவும் உக்ரைன் ஜனாதிபதி ஆலோசகரான டெட்டியான லோமகினா கூறினார்.
மரியுபோலில் மிகப்பெரிய மனிதப் பேரவலம் நடந்து வருகிறது. அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. சுமார் 160,000 பொதுமக்கள் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் இன்றி அவர்கள் பரிதவித்து வருகின்றனர் என உக்ரைன் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தரை, கடல் மற்றும் வான்வழி தாக்குதல்களால் 450,000 மக்கள் வசிக்கும் ஒரு நகரம் தகர்க்கப்பட்டுள்ளது. நகரம் புழுதி மயமாக மாற்றப்பட்டுள்ளது எனவும் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.