
நிலவும் மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிகளுக்கு மத்தியில் சுற்றுலாத்துறையை தடையின்றி பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க இன்று விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்காக மின்சாரம், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஆயுதப்படை மற்றும் பொலிஸ் பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சுற்றுலாத் துறையில் பஸ்கள் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பது, மின்வெட்டுகளில் இருந்து சுற்றுலா வலயங்களுக்கு விலக்கு அளிப்பது, எரிவாயுவைப் பெறும்போது சுற்றுலாத் துறையில் உள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
நாட்டில் நிலவும் மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவற்றினை நிவர்த்தி செய்யவே இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.