
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மூவரையும் தனித்தனியே நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
நிதி அமைச்சர் பஸிலுடனான சந்திப்புத் தொடர்பில் ருவிட்டரில் ஜெய்சங்கர், பொருளாதார நிலை
தொடர்பாகவும் இந்தியாவின் ஆதரவான பதில் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அயலுறவுக்கு முதலிடம் கொள்கைமூலம் நாம் தொடர்ந்து வழிநடத்தப்படுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்புத் தொடர்பில், அன்பு நிறைந்த வரவேற்புக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு நன்றி. எமது சந்திப்பையடுத்து முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன: இந்தியாவால் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கலாசார நிலையம் மெய்நிகர் மார்க்கமூடாக திறந்து வைக்கப்பட்டது. பௌத்த கலாசாரம் மற்றும் மரபுகளுக்கான ஆதரவு மீதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட நிகழ்வில் பங்கேற்றேன்.
யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஜெய்ப்பூர் செயற்கைக்கால் பொருத்தும் முகாம் மெய்நிகர் மார்க்கமூடாகப் பார்வையிட்டேன்’ என்று ருவிட்டரில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடனான சந்திப்புத் தொடர்பில், ’ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்ததையிட்டு மகிழ்வடைகின்றேன். நமது நெருக்கமான அயலுறவின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது. இந்தியாவின் தொடர்ச்சியான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் அவரிடம் உறுதியளிக்கப்பட்டது’ என்று ஜெய்சங்கர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் கொழும்பிலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுச் சென்றார். அதன்போது அமைச்சர் நாமல் ராஜபக்சவும் அங்கு அவருடன் இணைந்து கொண்டார்.