
மருந்து தட்டுப்பாட்டால் பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியறிந்து கலங்கியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயை தொடர்பு கொண்டு இந்த நெருக்கடிக்கு உடனடித் தீா்வு காண இந்தியா எவ்வாறு உதவ முடியும்? என உரிய தரப்பினருடன் ஆராயுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவா் குறிப்பிட்டுள்ளார்.
மருந்து தட்டுப்பாட்டால் பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவசர சத்திர சிகிச்சைகள் மாத்திரமே தற்போது இடம்பெற்று வருவதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இந்தச் செய்திகள் இன்று காலை வெளியாகி பெரும் அச்ச நிலையை தோற்றுவித்திருந்த நிலையிலேயே இதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் உடனடியாக எதிர்வினையாற்றியுள்ளார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் நிலையில் அத்தியாவசிய உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்யக் கூடிய டொலர் இன்றி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.