மோசஸ்
இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் முதல் 1980களின் ஆரம்பம் வரை பல கலை கலாச்சார, நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், இலக்கிய அரங்கங்கள், இந்திய, தாயக கலைஞர்களின் கலை வெளிப்பாடுகள் என ஆயிரக்கணக்கான நிகழ்வுகளை கண்டு,போர் சூழலால் அழிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான யாழ்ப்பாண திறந்த வெளி அரங்கம், பாரிய மண்டபமாக பரிணமித்து, அன்றைய திறந்த வெளி அரங்கு இருந்த அதே பகுதியில் பல நவீன வசதிகளுடன் யாழ் கலாசார மண்டபமாக மிளிர்ந்திருக்கிறது.
அந்த வகையில், கடற்தொழில் அமைச்சரும், மூத்த தமிழ் அரசியல்வாதியுமான டக்ளஸ் தேவானந்தாவின் கனவுகளில் ஓன்று பலித்துள்ளது என்றால் அது மிகையல்ல.
2010ம் ஆண்டு அன்றைய மகிந்த ராஜபக்ச அரசின் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கால்கோளிடப்பட்டு, இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு, நேற்று 28/03/2022 திங்கட்கிழமை சம்பிராதய பூர்வ திறப்புவிழா கண்ட, இந்த மண்டபம் தொடர்பில் ஊடகங்களிலும்,சமூக வலைத்தளங்களிலும் வெளியாகும் மாறுபட்ட கருத்துக்களே இன்றைய யாழ்ப்பான அரசியலின் பேசு பொருளாக அமைந்துள்ளது.
“யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம்” என யாழ் மாநகர சபை நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்ட இந்த கலாசார மண்டபம், தற்போது இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு.ஜெய்சங்கர், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆகியோரால் கொழும்பு அலரி மாளிகையில் இருந்து, இன்றைய மீன்படித்துறை அமைச்சர் டக்ளஸ். தேவானந்தா, மற்றும் வெளிவிவகார அமைச்சர் திரு G.Lபீரிஸ் ஆகியோர் முன்னிலையில் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மாநகர முதல்வர் திரு.மணிவண்ணன் சகிதம், இங்கே மண்டபத்தில் கூடியிருந்த முன்னாள் முதல்வர்களான, திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா,திரு.ஆர்னோல்ட், மாநகரசபை உறுப்பினர்கள், இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ்,நடராஜ், தூதரக அதிகாரிகள், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சபையின் தவிசாளர் திரு.சி.வி.கே.சிவஞானம், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான திரு.சிவஞானம் சிறிதரன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிரஜா உட்பட்ட வடமாகாணத்தின் பல அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் கூட்டத்தால் மங்கள வாத்தியம் முழங்க மகிழ்வுடன் வரவேற்க்கப்பட்ட திறப்பு விழா நிகழ்வுகளில் பல தமிழ் பரம்பரிய கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன.
தற்போது சம்பிரதாய பூர்வமாகவே இந்த மண்டபம் திறந்து வைக்கப்பட்டதாகவும் மிக விரைவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நேரிடியாக, விமரிசையாக திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் எனவும் யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

1.6 பில்லியன் ருபா செலவில் கட்டப்பட்ட இந்த மண்டபம் தொடர்பான இந்திய தரப்பு உத்தியோக பூர்வ அறிவிப்பு 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாண விஜயம் மேற்கொண்ட போதே வெளியாகியிருந்தாலும் அதற்க்கு முன்னர் திரு, மன்மோகண் சிங் இந்திய பிரதமராக இருந்த காலத்திலேயே இதற்கான திட்ட வரைவுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2010ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அன்றைய இந்திய பிரதமரிடம் முன்வைத்த தமிழ் மக்கள் நலக் கோரிக்கைகள் பலவற்றில் ஒன்றே இந்த கலச்சார மண்டபத் திட்டமும் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரிந்த வரலாறு.
அன்றைய தமது ஆட்சி காலத்திலேயே இதற்கான முன் வரைவுகள் யாழ் மாநகர சபைக்கு, இந்திய தரப்பால் அனுப்பி வைக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்தார் அந்தக்காலப் பகுதியில் யாழ் மாநகர முதல்வராக இருந்த திருமதி யோகேஸ்வரி பற்க்குணராஜா அவர்கள்.
பின்னர் மாநகர சபையில் தமது ஆட்சிக்காலம் முடிவடைந்ததனால் இந்த திட்டத்தை தொடர முடியாமல் போனதாகவும் தெரிவித்த அவர் இந்த மண்டபத்துக்கான மாதிரி வரைபடங்கள் புது டெல்லியில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டு அவற்றுள் யாழ்ப்பாண சூழலுக்கு பொருத்தமான ஒன்றை தாமும் தமது குழுவினருமே தெரிவுசெய்து அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். அதுவே தற்போது பல கலையரங்குகளுடன் கூடிய நவீன 12 மாடிக் கட்டிடமாக உருப்பெற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த கலாசார மண்டபம் நல்லாட்சி அரசின் சாதனைகளில் ஒன்று என அந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்துவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். ரணில்,மைத்திரி ஆட்சிக்காலமாகிய நல்லாட்சி எனச் சொல்லப்பட்ட காலத்தில் இடம்பெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போதே இதற்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாகி மண்டபத்திற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.
இதனை மட்டும் ஆதாரமாக வைத்துக்கொண்டு மண்டபத்திற்கான ஒட்டு மொத்த உரிமையையும் கோருவது மக்கள் மத்தியில் இவர்கள் மீதான விசனத்தை மேலும் அதிகரிக்கவே உதவும் என்கிறார்கள் யாழ்ப்பாணத்தின் பொது நோக்கர்கள் சிலர்.
வடமாகணத்திற்கான 50000 வீட்டுத் திட்டம், காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை என்பன உட்பட்ட ஏற்கனவே இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்கள் இந்தியாவில் திரு.மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய நிறைவேற்றப்பட்டவை என்பது வரலாறு.
யார் என்ன கூற்றை முன்வைத்தாலும் வரலாற்றை எவராலும் மாற்ற முடியாது என்கிற யதார்த்தத்துடன் யாழ் நகரின் மையப்பகுதியின் வரலாற்று அரங்கமாக இருந்த ‘திறந்த வெளி அரங்கம்’ அமைந்திருந்த பகுதி விஸ்த்தரிக்கப்பட்டு கம்பீரமாக “யாழ்ப்பான பண்பாட்டு மையமாக” எழுந்து நிற்கிறது இன்று.
600 பேரை உள்ளடக்கக் கூடியதான நவீன ஒலி அமைப்புடன்கூடிய உள்ளரங்கம், பல ஆயிரம் பார்வையாளர்கள் பார்த்து மகிழக் கூடிய திறந்த வெளி அரங்கம், இணையதள வசதிகளுடன் கூடிய பல்நோக்கு அமைப்பிலான நூலகம்,கலைக்காட்சி மையம்,மற்றும் சங்கீத இசைக்கருவிகள்,நடன வகுப்புக்களை நடத்துவதற்கான வசதிகளைக் கொண்ட அரங்கம் என்பவற்றை உள்ளடக்கியது இந்த மண்டபம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கனவுகளில் ஒன்றான இந்த மண்டபம் வடமாகணத்தின் குறிப்பாக யாழ் மண்ணின் எதிர்கால சந்ததியினருக்கும், கலை வாரிசுகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப்போகிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.