கிளிநொச்சியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் கொள்வனவு செய்தால் மாத்திரமே எரிவாயு விநியோகம் செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் அமைந்துள்ள எரிவாயு விநியோகத்தர் நிலையத்திற்கு முன்பாக இன்றும் மக்கள் கூடியிருந்தனர்.
கடந்த 28ம் திகதி முதல் அங்கு எரிவாயு விற்பனை செய்யப்படுவதில்லை எனவும், கடைகளிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறித்த எரிவாயு விநியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, மக்கள் சிரமங்களிற்குள்ளானதுடன், எரிவாயு விநியோகம் இடம்பெறாத வகையில் பிரதான வீதியை மூடி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கிளிநொச்சியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் கொள்வனவு செய்தால் எரிவாயு விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டிய மக்கள், அவ்வாறு எம்மால் கொள்வனவு செய்து பெற்றுக்கொள்ளாத நிலை காணப்படுவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, எரிவாயு விநியோகத்தர் நிலைய ஊழியர்களுக்கும் அங்கு வருகை தந்திருந்த மக்களிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து குறித்த மக்களிற்கு தேவையான எரிவாயு கொள்கலன்களை, வர்த்தக நிலையங்களில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் அமைந்துள்ள எரிவாயு விநியோகத்தர் நிலையத்திற்கு மக்கள் வருகை தந்து சிரமங்களை எதிர்கொள்ள வேண்டாம் எனவும், அங்கு விற்பனை இடம்பெறமாட்டாது எனவும் தெரிவிக்கும் அவர்கள் தேவையான சிலிண்டர்கள் வர்த்தக நிலையங்களிற்கு மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


