
நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வலியுறுத்தும் பிரேரணையை முன்வைக்க தயாராகி வருகின்றோம் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களுக்கு பிறகே ஜனாதிபதியால் கலைக்க முடியும். எனினும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நாளை வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று சட்டத்தரணியான உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது-
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியனவும் தீர்வுத் திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை.
முழு நாடும் சரியான பாதைக்கு எனும் வேலைத்திட்டத்தை நாமே முன்வைத்துள்ளோம். சரி, எதிரணிகளை விடுவோம், தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டியது அரசின் கடப்பாடாகும். அதைச் செய்யாவிட்டால் அரசு பெயில் என்றே புலப்படும்.
நாட்டு மக்களை சாகடிக்கும் இந்த அரசுக்கு ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்க அனுமதி வழங்குவதா அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்கு சென்று நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கக்கூடிய தரப்புக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கே இருக்கின்றது. அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும்.-என்றார்.