
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் தனியார் துறை ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிரஜைகள் ஆலோசனை சபை சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினையில் உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் அனைவரும் மிகுந்த துன்பப்படுகிறார்கள்.
130 ரூபாவிற்கு வாங்கிய பருப்பு தற்போது 390 ரூபா தாண்டி விற்பனை செய்யப்படுகின்றது. இதையே தனியார் விற்பனை நிலையங்களில் மூன்று மடங்கு கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களிற்கு சம்பள அதிகரிப்பு குறித்து எந்தவொரு தனியார்துறை உரிமையாளர்களும் முன்வரவும் இல்லை.
இந்த விடயம் குறித்து பேசமுன்வரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இது தொடர்பாக பேச முன்வரவில்லை. சித்திரை பிறக்கவிருக்கும் நிலையில் புத்தாண்டு நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் தனியார் துறையினைச் சேர்ந்தவர்கள் சிறை வாழ்க்கை வாழ்கின்றனர்.
அவர்களுக்கு எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை. தனியார் துறையினருக்கு ஆகக்குறைந்தது 50 வீதமான சம்பள உயர்வினை இந்த புதுவருடத்தில் இருந்தாவது கொடுக்க முன்வரவேண்டும் என பிரஜைகள் ஆலோசனை சபை விரையமாக வேண்டி நிற்கின்றது.
ஒருமனிதன் விடியற்காலை துாக்கத்தல் எழுந்தவுடன் எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்காக எங்கே வரிசையில் காத்திருப்பது என்று வாழ்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றான். சிறு சிறு வியாபாரிகள் எல்லாம் சின்னாபின்னமாகிப்போய்விட்டனர். அரசாங்கமாக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் முதலில் இவர்கள் தொடர்பாக பேசுங்கள்.- என்றார்.