முல்லைத்தீவு சிறுமிகள் துஸ்பிரயோக சம்பவம்; மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது!

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16ம் திகதி அம்பலவன் பொக்கணை பகுதிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற 14, மற்றும் 15 வயது சிறுமிகள் இருவர் வீடு திரும்பவில்லை, அதேநேரம் அன்றைய தினம் மாலைநேர வகுப்புக்கும் செல்லவில்லை.

இது தொடர்பில் பெற்றோரால், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பின்னர் இரு நாட்கள் கழித்து இரு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சிறுமிகளிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் , சிறுமிகளில் ஒருவருடன் பேஸ்புக் ஊடாக பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரை சந்திப்பதற்காக சிறுமிகள் இருவரும் பேருந்தில் மட்டக்களப்பு – செங்கலடிக்கு சென்றமையும், சிறுமிகள் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் வெவ்வேறு நபர்களால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டன.

சிறுமிகளின் வாக்கு மூலத்தின் அடிப்படையில். மட்டக்களப்பை சேர்ந்த 17 வயதான இரு சிறுவர்களை கைது செய்துள்ளதுடன், மேலும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ய பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை , மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் வந்த சிறுமிகளை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் யாழ்.நகர்பகுதி வர்த்தகர் ஒருவரும் அவருடைய இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சிறுமிகளில் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 சிறுவன் ஒருவனும், சிறுமியின் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் மேலும் விசாரணைகள் துரிதமாக இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *