நேற்றிரவு முதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் பார்வையாளர்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான செயற்பாடு திடீரென மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக குறித்த முகநூல் பக்கத்தில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு பல்வேறு தரப்பாலும் விமர்சனங்களுடன் கூடிய கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சமூக ஊடக ஆய்வாளர் சஞ்சன ஹத்தொட்டுவ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில் ‘2010 ஜனவரி 26ம் திகதி முதல் இலங்கையின் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேஸ்புக் பக்கங்களை ஆய்வு செய்து வருகின்றேன். யாரும் அவர்களின் உத்தியோகப்பூர்வ பக்கங்களில் கருத்துகளை பதிவிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை.
எனினும் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதியான கோட்டாபய ராஜபக்ச முதன் முறையாக கருத்துகளை பதிவிடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.
