
தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள். புலம்பெயர் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்துவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை. எனவே அவர்கள் வருவார்கள் என்று திடீரென பகல் கனவு காண வேண்டிய அவசியம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்று மாலை மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் நான் சென்னைக்குச் சென்ற போது தமிழ் நாட்டின் நிதியமைச்சரோடு நீண்ட பேச்சுவார்ததைகளை நடத்தியிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக பல முன்னெடுப்புகள் தற்போது நடைபெறுகின்றன. அதிலொன்று தமிழ்நாட்டிலிருந்து வரும் முதலீட்டாளர்கள் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களையும் இணைத்துக் கொண்டு வருகின்ற திட்டமும் இருக்கின்றது.
அந்தப் பொறிமுறையொன்றை ஏற்படுத்த நாங்கள் முயல்கின்றோம். அதிலே நேரடியாக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பாத இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தினர் தமிழ்நாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து வர விரும்பினால் அதற்கான ஒரு வழியையும் நாங்கள் ஏற்படுத்துகின்றோம்.
ஆனால் இது எல்லாவற்றிற்கும் முன்னர் சர்வகட்சி மாநாட்டிலே இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நான் சொன்ன ஒரே ஒரு விடயம் இந்த நாட்டிலே தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் என்பதாகும்.
அதுமட்டுமல்லாது ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இன்னுமொரு விடயத்தையும் நான் கூறியிருந்தேன். புலம்பெயர்ந்த மக்கள் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்துவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை.
ஆகையால் இந்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அவர்கள் வருவார்கள் என்று திடீரென பகல் கனவு காண வேண்டிய அவசியம் கிடையாது. அரசியற் தீர்வொன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் தான் அதைப்பற்றி நாங்கள் பேச முடியும்.- என தெரிவித்தார்.