தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொள்ளும் மாணவர்கள் – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர்.

பின்னர் குருதியினை கடதாசி மூலம் துடைத்துவிட்டு கிருமி தொற்று நீக்கி திரவத்தை (சானிடைசர்) காயத்தின் மேல் தெளித்து கொண்டதாக நேரில் பார்த்த சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை குறித்த மாணவர்கள் சாதரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவருக்கு ஒருவர் பார்த்து வெட்டிக்கொண்டதன் மூலமே வெட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஓரிரு மாணவர்கள் செய்வதனை பார்த்து ஏனைய மாணவர்களும் இவ்வாறு செய்து கொண்டதாகவும், கட்டிளம் பருவத்தில் மாணவர்கள் இது போன்ற ஹீரோயிசம் எனும் போர்வையில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுப்படுவதாகவும் உளநல வைத்தியர் ம. ஜெயராசா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைகளில் வெட்டுக்கொள்ளும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் போதை பொருள் பாவணைக்கு அடிமையான மாணவர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு கைகளை வெட்டிக் கொள்ளும் மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைள் நிறைவுற்று வேலை வாய்ப்புக்களுக்காக முக்கியமாக பொலிஸ், நீதித்துறை மற்றும் இராணுவம் உள்ளிட்ட பல தொழில் துறைகளுக்கு நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லும் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே இம் மாணவர்களுக்கு தாங்கள் உளவியல் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *