
கொழும்பு, மார்ச் 31
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிலைப்படுத்தி, குறைந்த வருமானங்களை பெறும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பத்தாயிரம் ரூபா மொத்தமாகவோ அல்லது இரு முறைகளாகவோ வழங்கப்படுமென, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உறுதியளித்ததாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தெரிவித்தார்.
அரவிந்தகுமார் எம்பி, நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை, புதன்கிழமை நேரடியாகச் சந்தித்து, நிவாரண நிதி வழங்குவது குறித்து விளக்கம் கேட்டபோதே, நிதியமைச்சர் மேற்கண்ட விளக்கத்தை வழங்கியுள்ளார்.
கடந்த முறைகளில் நிவாரண நிதிகள் வழங்குவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. ஆகையினால், தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு வழங்கப்படவுள்ள நிவாரணம் குறித்து, நிதியமைச்சரிடம் வினவியதாக தெரிவித்த அரவிந்த குமார் எம்பி, அதற்கு நிதியமைச்சர், புத்தாண்டினை முன்னிட்டு சகலருக்கும் பத்தாயிரம் ரூபா என்ற அடிப்படையில் மொத்தமாகவோ அல்லது இரு முறைகளாகவோ வழங்கப்படும். குறைந்த வருமானம் கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், இந் நிவாரண நிதி கிரமமாக வழங்கப்படும்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையினால், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஆகியவற்றினால், மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதனை கருத்திற் கொண்டே, குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு, பத்தாயிரம் ரூபா நிவாரண வழங்க, அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று தெரிவித்ததாக கூறினார்.
ஆகவே, நாட்டின் இன்றைய நெருக்கடி நிலையில், அரசு மக்களுக்கு நிவாரண நிதியினை வழங்குவது பாராட்டத்தக்கதும், வரவேற்கக்கூடியதுமாகும். நாட்டு மக்கள் மற்றும் இந்நாட்டின் மீது இவ் அரசு வைத்திருக்கும் அபார நம்பிக்கையும், மக்கள் மீது வைத்திருக்கும் பாசமுமே, இதற்கு காரணமாகும் என அரவிந்தகுமார் எம்பி தெரிவித்தார்.