87 ஆயிரம் பெருந்தோட்ட பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை

கொழும்பு, மார்ச் 31

பெருந்தோட்டத்துறையில் தொழில்புரியும் பெண்களில் 87 ஆயிரம் பேர் மத்திய கிழக்கில் பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர் என்று தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள் அநீதியான முறையில் நடாத்தப்படுவதை தவிர்க்க புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுமெனவும் அவர் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து கிடைத்துள்ள முறைப்பாடுகள் சம்மந்தமாக தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்களின் தலைவர்களுடன் தொழில் திணைக்களத்தில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களுகளுக்கு பல்வேறு அநீதிகள், அச்சுறுத்தல்களை இழைப்பதாக பெருந்தொகையான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் தோட்டத் தொழிலாளர்களை தொழில் சட்டதிட்டங்களின் படி முறையான தொழில் நிலையை ஏற்படுத்தித் தருவதற்காக புதிய சட்ட திட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தோட்ட கம்பனி பிரதிநிதிகள் சில தோட்டங்களில் இவ்வாறு தொழில் சட்டங்களை மீறும் சம்பவங்கள் இடம்பெறுவதாக ஏற்றுக்கொண்டனர்.

தொழில் அமைச்சின் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என அந்தப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் உறுப்பினராகவுள்ள தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர்கள் வழங்கும் சந்தா பணத்தை தொழிற்சங்கங்களின் கணக்குகளுக்கு வைப்பிலிட தோட்டக் கம்பனிகள் பின் நிற்பதால் இந்த சந்தா பணத்தை தொழிற்சங்கங்களின் வங்கி கணக்கில் வைப்புச் செய்வதை உறுதிப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுமென தெரிவித்த அமைச்சர் தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி மற்றும் அவர்களது தொழில் பாதுகாப்புக்காக விசேட புதிய சட்ட மூலம் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *