
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயங்கேணி பிரதேசத்தில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் பிரதேசத்திலுள்ள பல வீடுகளை சுற்றிவளைத்தபோது மக்களைப் பயமுறுத்தி பாரிய கொள்ளை, கொலை, கத்திக்குத்து, தங்கம் வழிப்பறி, வீடுகளை உடைத்து கொள்ளையிடல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத் தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியாவைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் போராளியான சோழன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து பொலிஸாரினால் கிறனைட்டுகளுடம் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இவர் மீது ஏற்கனவே ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இரண்டு முறைப்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருவர் வாள், கோடரி என்பவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இவர் மீது ஏற்கனவே ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் 6 கிராம் ஹெரோயினுடன் கைதான நிலையில் மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக நால்வர் கைதாகியுள்ள நிலையில் மேலும் பலர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.