
கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கி வந்த பணப்பரிமாற்று நிலையத்தின் அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இரத்துச் செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அந்நிய செலாவணிகளுக்கு மேலதிக ரூபாய் செலுத்தப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மத்திய வங்கியின் வெளிநாட்டு அந்நிய செலாவணி திணைக்களம் நேற்று சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணைகளை நடத்தியுள்ளது.
குறித்த விசாரணையில் சம்பந்தப்பட்ட பணப்பரிமாற்று நிலையம் அனுமதிப் பெற்ற வங்கிகளின் கொள்முதல் விலையை விட அதிக விலையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்முதல் செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இன்று நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த நிறுவனம் அனுமதிப் பெற்ற பணப்பரிமாற்று வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் அந்த நிறுவனத்துடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல்கள் வெளிநாட்டு அந்நிய செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கை எனக் கருதப்படும் என இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.