திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாற்றில் நேற்றிரவு (30) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக பணிபுரியும் 42 வயதான யோதிமணி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர் .
இவர் மூதூர் – கடற்கரைசேனையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு சென்று மீண்டும் திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண், கிண்ணியா – மட்டக்களப்பு பிரதான வீதியில் உப்பாறு பாலத்துக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், பின்புறமாக வந்த பஸ் அவரை முந்திச்செல்ல முற்பட்டு, மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் இதனையடுத்து சம்பவ இடத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
