
தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் மக்கள் மின்சாரம் அதேபோன்று நீரினை மிக கவனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (31) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கக் கூடிய எரிபொருள் பிரச்சினை காரணமாக மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த மின் நெருக்கடி காரணமாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மூலம் வழங்கப்படுகின்ற நீரானது தொடர்ச்சியாக வழங்குவதில் சில சந்தர்ப்பங்களில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.
எனவே தற்போதைய இருக்கக் கூடிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்கள் மின்சாரத்தை மிக கவனமாக பயன்படுத்துமாறும் அதேபோன்று தேவையற்ற வகையில் மின்சாரத்தை அனாவசியமாக பயன்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு இதன் போது அவர் மக்களிடம் வேண்டிக் கொண்டார்.
அதே போன்று சகல நிறுவனங்களும் மின்சாரம் மற்றும் நீர் போன்றவற்றை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறும் கடந்த மாதத்தில் பயன்படுத்தப்பட்ட மின் அலகுகளிலும் பார்க்க குறைவான மின் அலகுகளை இம்மாதம் உட்பட அடுத்துவரும் மாதங்களில் பேண தேவையான பொறிமுறையை வகுத்து செயற்படுமாறும் இதன்போது பிரதம செயலாளர் அறிவுரை வழங்கினார்.
எது எவ்வாறு இருப்பினும் வைத்தியசாலைகள் மற்றும் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் வசதி என்பன எவ்வித தடங்கலுமின்றி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல். பி. மதநாயக்க, துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.