உக்ரைனுக்கு மேலும் ரூ. 2 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா

வாஷிங்டன், ஏப் 02

உக்ரைன் மீது ரஷ்யா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் உக்ரைனுக்கு ஏற்கனவே 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள், ராக்கெட்டுகள், மருந்துப்பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்க உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க உள்ள ராணுவ உதவிகள் இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 278 கோடி ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *