மக்களின் கோரிக்கைக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்த்து ஆட்சியை விட்டு செல்ல வேண்டும்! – ரிசாத் எம்.பி

மக்களின் கோரிக்கைக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்த்து ஆட்சியை விட்டு செல்லவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுர்தீன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நாட்டிலே வாழுகின்ற மக்கள் பசியாலும் பட்டினியாலும் கஸ்டத்திலேயே வீதிக்கு இறங்கி தமக்கு நியாயம் தாருங்கள் எம்மை வாழ விடுங்கள் பிள்ளைகளுக்கு உணவின்றி கஸ்டப்படுகின்ற வேதனையின் வெளிச்சமாகவே நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் துன்பியல் சம்பவங்களாக இடம்பெற்று வருகின்றது.

எனவே இதனை அடக்குவதற்கு மக்களின் மீது அதிகாரத்தினை பிரயோகித்து அவர்களை அடக்கி அச்சுறுத்தி சிறைப்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.

ஆட்சியாளர்களுக்கு தார்மீக பொறுப்பு இருக்கின்றது. நாட்டு மக்களை தனது மக்களாக நினைத்து அவர்களுக்கான அடிப்படை தேவைகளை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை ஆட்சியாளர்கள் செய்யவேண்டும்.

எனினும் ஆட்சியாளர்கள் இந்த ஆட்சிப்பீடத்தில் ஏறிய இரண்டு வருடங்காக தொடர்ந்தும் இனவாதத்தினையும் மதவாதத்தினையும் நாட்டில் விதைத்து, நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள்.

அவர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்கள் தமக்கு யாரும் இல்லாதது போல் எல்லோரும் வீதிக்கு இறங்கியிருக்கின்றார்கள். எனவே இந்த நிலையில் அரசாங்கம் உடனடியாக பதவியில் இருந்து விலகி நாட்டுமக்கள் விரும்புகின்ற நாட்டுக்கு நல்லதை செய்யக்கூடிய ஆட்சியை உருவாக்குவதற்கு ஜனாதிபதியும் ஆட்சியாளர்களும் விட்டுக்கொடுப்பை செய்வதனூடாகவே தீர்வை காணமுடியுமே தவிர இவர்களால் இந்த நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதனை நிரூபித்துவிட்டார்கள்.

நாடு இவர்களால் ஒவ்வொருநாளும் அதலபாதாலத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றது. எனவே நாட்டுமக்களின் உணர்வுகளை மதித்து நாட்டினை மதித்த இனமத பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நாட்டு மக்கள் விடுக்கும் கோரிக்கைக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்கவேண்டும். – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *