
இந்தியா இலங்கைக்கு நேர்மையாக நல்லெண்ண நோக்கில் கடனை வழங்கவில்லை. இலங்கைக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தும் நாடாக இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் எனவும் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஆணவ போக்கான முடிவுகளை எடுத்ததன் காரணமாகவே நாட்டிற்கு தற்போதைய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக சிங்கள வார பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்தியா மேலும் இலங்கையை இந்த நெருக்கடியில் இறுக்க வைக்கும். எமக்கு எங்கிருந்தாவது டொலர் கிடைக்க வேண்டும். சட்டரீதியானதா, சட்டவிரோதமானதா என்று டொலர்களில் அச்சிட்டிருப்பதில்லை.
இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு பில்லியன் டொலர் கடனை திரும்ப செலுத்த வேண்டும். அதனை செலுத்தும் மட்டத்தில் நாடு இல்லை. இதனால், எங்கிருந்தாவது டொலர்களை கொண்டு வர வேண்டும். நாடு பாதுகாக்கப்படும் வகையிலேயே டொலர்களை வரவழைக்க வேண்டும். நாட்டின் ஒரு பகுதி பிரித்து கொடுத்து பணத்தை பெறுவதில் பயனில்லை.
எமக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தும் நாடு தான் இந்தியா. அவர்கள் நேர்மையான நல்லெண்ண நோக்கத்தில் கடனை வழங்கவில்லை என்பது எமக்கு புரிகின்றது. இதன் காரணமாகவே ஒரு வருடத்திற்குள் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அந்த கடனை இந்தியா வழங்கியது.
இன்னும் ஒரு வருடத்தில் இலங்கை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பதை அறிந்தே இந்தியா கடனை வழங்கியது. நாம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது.
நாட்டை தற்போது நிர்வாகம் செய்வது நிபுணத்துவம் பெற்றவர்கள், பொருளாதார நிபுணர்கள் அல்ல. எவ்வித அனுபவமும் இல்லாத கொள்ளையடிக்கவும், மோசடிகளை செய்யவும் விரும்புவோர் இணைந்தே நாட்டை நிர்வாகம் செய்து வருகின்றனர்.
அவர்களின் ஆணவ போக்கான தீர்மானங்கள் காரணமாக நாட்டிற்கு இந்த நிலைமை ஏற்பட்டது எனவும் காமினி விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.