
மக்களின் குரல் அமைப்பினரால் திருகோணமலை மக்களது ஜனநாயக குரல் எனும் தொனிப்பொருளில் நாட்டில் நிலவிவரும் விலையேற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட போது பொலிஸாரால் குறித்த ஆர்ப்பாட்டம் இடை நிறுத்தப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிவரும் உறவுகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து குறித்து ஆர்ப்பாட்டத்தினை உவர்மலையில் அமைந்துள்ள கடற்கரைப் பூங்காவில் நடத்த முற்பட்டபோது, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரால், அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும் இக்காலப்பகுதியில் ஒன்று கூடுவதற்கு அரசினால் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை திருப்பி அனுப்பினர்.