
தற்போதைய சூழ்நிலையில், அடுத்த சில நாட்களில் காபந்து அரசாங்கத்தை நியமிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதித்தால் அரசியல் ஒற்றுமைக்காக தனது அமைச்சு பதவியை தியாகம் செய்ய தயார் என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் எடுத்த அண்மைய முடிவுகள் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், இது தேர்தலுக்குச் செல்வதற்கான நேரம் அல்ல, மாறாக காபந்து அரசாங்கம் நியமிக்கப்பட்டால், பதவி விலகி அரசியல் ஒற்றுமைக்கு வழி வகுக்கும். தற்போதைய உடனடி தேவை என்பது பொருளாதாரமும் ஐக்கியமும் ஆகும்.
இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு, மின் நெருக்கடி மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற விடயங்கள் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய அதேவேளை, நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு அரசியல் ஒற்றுமையும் தேவையாகும்.
எனவே, இதை மனதில் வைத்துக்கொண்டு அரசியல் ஒற்றுமைக்காக காபந்து அரசாங்கம் அமைந்தால் எனது அமைச்சிலிருந்து விலகுவேன்.- என்றார்.