எதிரணிகள் மேற்கொள்ளும் போராட்டங்கள் எமது அரசாங்கத்திற்கு உந்துதலாகவே அமைகின்றது: டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு, ஏப் 2

அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் திண்டாடி வரும் மக்கள் வீதிக்கிறங்கி தன்னெழுச்சியாக போராடி வரும் நிலையில், இந்த போராட்டங்கள் எதிர்தரப்பினால் தூண்டி விடப்பட்டவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

நீண்ட பல வருடங்களாக எமது நாடு எதிர்கொண்ட பொருளாதார சவால்களின் திரட்சியே இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.

கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு அவற்றில் வெற்றி பெற்ற எமது அரசாங்கம், தற்போதைய பொருளாதார சவால்களையும் முறியடிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இவ்வாறான நிலையில், மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் எதிரணிகள், மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை மேற்கொள்வதுடன் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான போராட்டங்கள் விளையாட்டுக் களங்களில் வீரர்கள் சவால்களை எதிர்கொள்ளுகின்ற போது, ரசிகர்களினால் வழங்கப்படுகின்ற உற்சாகமூட்டல்கள் போன்றே அமைந்துள்ளன.

ரசிகர்களின் உற்சாகமூட்டல்கள், விளையாட்டு வீரர்களுக்கு வெற்றியடைய வேண்டும் என்ற வைராக்கியத்தினையும் உந்துதலை ஏற்படுத்தவது போன்றே, எதிரணிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற போராட்டங்கள் எமது அரசாங்கத்திற்கு உந்துதலாக அமைந்திருக்கின்றன.
எனவே, மக்கள் சகிப்புத் தன்மையுடனும் நம்பிக்கையுடனும் எதிர்வரும் சில நாட்களை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *