
இலங்கையின் ஆயுதப் படைகள் எப்போதும் அரசியலமைப்புக்கு இணங்கி செயற்படும் என பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் இணைப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை விளக்கிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இராணுவம் ஒரு தொழில்முறை அணி என்ற வகையில் அரசுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க எப்போதும் தயாராக உள்ளது என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கையை தளமாகக் கொண்ட உயர்ஸ்தானிகரகங்கள், மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் இணைப்பாளர்களை இன்று பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, பங்களாதேஸ், ஈரான், ஜப்பான், மாலத்தீவுகள், பாகிஸ்தான், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.