
வாஷிங்டன், ஏப் 05
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புச்சா நகரில் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து கிடந்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் போர்க் குற்றம் புரிந்திருப்பதாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை ரஷ்யா தரப்பு மறுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ‘உக்ரைன் தலைநகர் கீவுக்கு வெளியே உள்ள முக்கிய நகரான புச்சாவில் கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. புச்சா நகரில் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்தீர்கள். ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர்க் குற்றவாளி ஆவார். புச்சா நகரில் என்ன நடந்தது என அனைத்து விவரங்களையும் சேகரித்து புதின் மீது போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். புச்சா நகரில் நடந்திருப்பது மூர்க்கத்தனமானது. இது போர் குற்றம். இதற்கு ரஷிய அதிபர் புதின் அவர் பொறுப்பேற்க வேண்டும்’ என்று ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறினார்.