ஐ.பி.எல்.: லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி சிறப்பான வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 12ஆவது லீக் போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

மும்பையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 68 ஓட்டங்களையும் தீபக் ஹூதா 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், வொஷிங்டன் சுந்தர், ரொமாறியோ செப்பர்ட் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 170 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராகுல் திரிபத்தி 44 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரான் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், அவிஷ்கான் 4 விக்கெட்டுகளையும் ஜேஸன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் குர்ணல் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய லக்னொவ் பந்துவீச்சாளர் அவிஷ்கான் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *