
அமைச்சுப் பதவிகளை ஏற்று காபந்து அரசில் இணையுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர நிராகரித்துள்ளன.
‘அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக, தேசிய தேவை எனக் கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.
அதற்காக அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டு, தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு ஒன்றிணையுமாறு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்’ என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றுக் காலை அறிக்கை வெளியிட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி என எதிரணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்துள்ளன.