யாழ் பல்கலை முள்ளிவாய்க்கால் தூபி விவகாரம் – மாணவர்கள் இருவர் நீதிமன்றால் விடுதலை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி கடந்த 2021/01/8 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினரால் இடிக்கப்பட்ட வேளை, பல்கலை மாணவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் தேசத்தவர்கள் என அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய இராசரத்தினம் தர்ஷன் மற்றும் பாலசிங்கம் யுகந்தன் ஆகிய இருவரும் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு
அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து 09/01/2021 யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் அவர்களினுடைய வாசஸ்தலத்தில் மாணவர்கள் முற்படுத்தப்பட்டபோது மாணவர்களின் சார்பில் சட்டத்தரணிகளான விஸ்வலிங்கம் திருக்குமரன் மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் முன்வந்து ஆஜராகிய நிலையில், சந்தேகநபர்கள் இருவரையும் நீதவான் 50,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

இந்நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக வழக்கு இடம்பெற்றுவந்த நிலையில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் சட்டத்தரணி பானுப்பிரியன் ஆஜராகி வந்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் அ.ஆனந்தராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ஆர்.ஜனகன், மாணவர்களை தாண்டியும், பல்கலைக்கழகம் சாராத சட்டத்தரணி அரசியல்வாதி மற்றும் பல்கலைக்கழகம் சாராத ஒருவர் உட்பட பல்கலைக்கழகத்திற்கு உட்சென்றவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் இரண்டு மாணவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என நீதிமன்றுக்கு எடுத்துரைக்கப்பட்ட நிலையில், நீதவானால் மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *