கரைச்சி பிரதேச சபையின் ஊழல்கள் தொடர்பில் விசாரணை அறிக்கை சமர்பிக்குமாறு ஆளுநர் பணிப்புரை

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு ஏழு நாட்களில் இடைக்கால அறிக்கையும், 14 நாட்களில் இறுதி அறிக்கையினையும் சமர்பிக்குமாறு தன்னுடைய மேலதிக செயலாளார் நிருபராஜ் லாகினிக்கு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபையின் தற்போதைய நிர்வாகத்தில் அதிகளவான ஊழல்கள், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பலரும் பல தடவைகள் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

அத்தோடு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும் கரைச்சி பிரதேச சபையின் ஊழல்கள் கடந்த காலத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டிருந்தன. இருப்பினும் அதற்கு எதிராக அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பொது மக்களால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அத்தோடு சபையில் எதிர்தரப்பு உறுப்பினர்களும் தொடர்ச்சியாக சபையின் ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பில் குரல் எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பில் ஆவணங்களுடன் முறையிட்டமையினை தொடர்ந்து அவர் உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

ஆளுநரின் துரித நடவடிக்கையினை தொடர்ந்து பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் ஊடாக கரைச்சி பிரதேச சபையின் ஊழல்கள்,முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *