
புன்னாலைக்கட்டுவன், ஏப் 5
எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தின் கீழ் இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி சாரதியின் கவனக்குறைவினால் சில்லு ஏறி உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்புநிலையத்தில் திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் (வயது 37) என்பவரே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
உயிரிழந்தவர் வயாவிளான் நோக்கி பேருந்தில் பயணித்துள்ளார். எனினும் தூக்கத்தில் அவர் வயாவிளானில் இறங்கவில்லை. பேருந்து நடத்துனரும் கவனயீனத்தால் கவனிக்கவில்லை. மீண்டும் பேருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்து புன்னாலைக்கட்டுவனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் காத்திருந்துள்ளது. அதனால் கீழே இறங்கிய பயணி நிலத்தில் அமர்ந்திருந்துள்ளார். அதனை அவதானிக்காக சாரதி பேருந்தை எடுத்த போது பயணி மீது ஏறியுள்ளது. பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பேருந்து சாரதி அங்கிருந்து தலைமறைவாகியிருந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.