
வாழைச்சேனை – புணாணை மியான்குளம் பகுதியில் வைத்து 3100 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் இன்று புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 3100 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் புணாணை மியான்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து மட்டக்களப்பு பகுதிக்கு வியாபாரத்திற்காக இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த நிலையில் புணாணை மியான்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன், தொடர்புடைய வியாபாரிகள் வேறு யாராவது இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப் பொருள் பாவனையை இல்லாமல் செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் இணைந்து செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.