வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முரண்பாடு: ஏ9 வீதியின் குறுக்கே பேரூந்துகளை நிறுத்தி போராட்டம்

வவுனியா – ஈரப்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் 12.00 மணியளவில் எரிபொருள் வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பேருந்தினை ஏ9 வீதியின் குறுக்கே நிறுத்தி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 45 நிமிடங்கள் வரை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஈரப்பெரியகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசலை பெற்றுப்கொள்வதற்காக வாகனங்கள் காத்திருந்த போது, டீசல் நிறைவடைந்துள்ளதாக எரிபொருள் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.

டீசல் இருந்த போதிலும், தற்போது டீசல் நிறைவடைந்து விட்டதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கூறுவதாக தெரிவித்து சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் குறுக்கே இரு பேரூந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏ9 வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. சம்பவ இடத்திற்கு ஈரப்பெரியகுளம் பொலிஸார் உடனடியாக வருகை தந்து எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடன் கலந்துரையாடினார்.

அத்தியாவசியத் தேவைக்காக டீசல் இருப்பதாக இதன்போது முகாமையாளர் தெரிவித்தார். இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2500 லீட்டர் டீசல் வாகனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமையடுத்து ஏ9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *