
அனுராதபுரதம், ஏப் 07
யார் இந்த ஞானாக்கா? இலங்கை முழுவதும் பேசப்படும் ஒருவராக மாறியதற்கான காரணம் என்ன? இவரைப் பற்றிய ஓர் பார்வை.
அனுராதபுரத்தை சேர்ந்த ஞானாக்கா 1988,89 காலப்பகுதிகளில் வைத்தியசாலையில் சிற்றூழியராக பணிபுரிந்தார், பின்னர் குறிசொல்ல ஆரம்பித்துள்ளார். தன்னுடைய கணவர் இறந்த பின்னரும் வைத்தியசாலை சிற்றூழியராக அவர் பணியாற்றியிருந்தார். பின்னர் காளியின் அருள் தனக்கிருப்பதாக கூறி , காளி கோயிலொன்றை கட்டி குறிசொல்ல ஆரம்பித்தார்.
உள்ளூர் மக்கள் அவரை பெரிதாக நம்பாத போதும், அரசியல்வாதிகள் அவரை தீவிரமாக நம்புகிறார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரதானமான சோதிடராக இவர் உள்ளார். ஆளும், எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் பலர் ஞானாக்காவின் ‘வாக்கை’ நம்பியிருப்பதால், அனுராதபுரத்தில் ஞானாக்கா தனி சாம்ராஜ்ஜியமே கட்டியெழுப்பியுள்ளார்.
முறைகேடாக சொத்துக்கள் சேகரித்தல், அரச நிலத்தை அபகரித்து ஹோட்டல் கட்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக சிங்கள ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகிறது.
கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த ஆளுந்தரப்பு பிரமுகர் ஒருவர் அமைச்சு பதவிபெற ஞானாக்காவிடம் சென்றுள்ளார். அவருக்கு அமைச்சு பதவி கிடைத்துள்ளது. இதற்கு பரிகாரமாக, அனுராதபுரத்தில் சொகுசு வீடொன்றை ஞானாக்காவிற்கு அவர் பரிசளித்துள்ளார். எனினும், அவரது அமைச்சு பதவி பின்னர் பறிக்கப்பட்டது.
ஞானாக்கா ஒரு சூனியக்காரியென்றும், அவரது ஆலோசனைப்படியே கோட்டாபய நாட்டை நிர்வகித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மை நாட்களில் ஞானாக்காவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவகின்றமையும் குறிப்படத்தக்கது.