மக்களுக்கு மதிப்பளித்து கௌரவமாக விலகுங்கள்!

நாட்டு மக்கள் தேர்தல் வேண்டும் என்று கோரவில்லை. ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவே போராட்டம் நடத்துகிறார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது-
இந்த நாடாளுமன்றில் எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், ஆனால் 225 உறுப்பினர்களையும் மக்கள் வெறுக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? இதுதான் இந்த நாட்டின் நிலைமை.

ஒரு வருடத்துக்கு சம்பளம் வேண்டாம் என்றும், நாடாளுமன்றில் உள்ள உணவகத்தில் உணவு உட்கொள்ள மாட்டேன் என்றும் நான் கூறுகின்றேன் .அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு கூற முடியுமா? நாடு இப்போது பெரும் பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. ராஜபக்சக்கள் கௌரவமாக பதவி விலக வேண்டும், மக்களும் அதையே கோருகிறார்கள்.

கோத்தாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பொருளாதாரம் தொடர்பில் நன்கு கற்ற ஹர்ஷ டி சில்வாவை தற்காலிகமாக ஜனாதிபதியாக்குவோம். பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தீர்க்க வேண்டுமென்று அவருக்குத் தெரியும். அதை விட்டுவிட்டு பதவிக்காகவோ, தேர்தலுக்காகவோ போட்டியிடவேண்டிய நேரம் இது இல்லை.

அப்படி இல்லையென்றால், மக்கள் விடுதலை முன்னணியாவது ஒரு அணியாக திரட்டிக்கொண்டு தற்காலிகமாக அரசை பொறுப்பேற்று செய்து காட்டுவதற்கு வாய்ப்பளிப்போம்.- என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *