மக்களைச் சாந்தப்படுத்த வித்தைகள் காட்டும் அரசு!

ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் மக்கள் சமூக வலைத்தளக் கணக்கு ஒளிப்படங்களில் இலங்கைத் தேசியக் கொடியை இணைத்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் பதவி விலகக் கோரும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் பேஸ்புக் கணக்கு ஒளிப்படங்களிலும், கடந்த சில நாள்களாக மக்கள் இணைத்து வரும் இலங்கைத் தேசியக் கொடி நேற்றிரவு இணைக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்சவின் மகன்களின் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச உட்பட, ஆளும் கட்சியின் எம்.பிக்கள் தங்கள் பேஸ்புக் கணக்கு ஒளிப்படங்களில், இலங்கைத் தேசியக் கொடியை இணைத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களைச் சாந்தப்படுத்தும் ஒரு முயற்சியாக ராஜபக்சக்கள் இதை மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. ஆனால் இது மக்களை முட்டாள்களாக நினைக்கும் செயற்பாடு என்று சமூக வலைத்தளங்களில் மக்களால் கருத்துப் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேநேரம், இலங்கைத் தேசியக் கொடியை இணைத்துள்ள மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரின் ஒளிப்படங்களுக்கு மக்கள் சிரிப்பு மற்றும் ஆத்திரக் குறியீடுகளை தாராளமாகக் கொடுப்பதைக் காணமுடிந்தது. அவர்களின் பேஸ் புக் பக்கங்களில் கருத்துக்களைப் பதிவிடும் வசதிகள் நீக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *