
யாழ்ப்பாணம்,ஏப் 09
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் பிரதான தமிழ்க் கட்சிகளின் ஐந்து தலைவர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்தனர். அதன் பின்னர், இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை தமிழர் தரப்பின் நிலைப்பாடாக முன்வைக்க வேண்டும் என்ற இணக்கம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டதாக அறியவந்தது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கல நாதன் எம்.பி., தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித் தார்த்தன் எம்.பி., தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் எம்.பி., தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என். சிறிகாந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன் னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோர் நேற்று மாலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஒன்றுகூடி தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆராய்ந்தனர்.
இந்தக் கூட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் கூட்டத்தில் பங்குபற்றவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையால்தான் நாட்டுக்கு இத்தகைய பல்வேறு நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன, தமிழர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கும் எதேச்சாதிகார வலிமையுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை நீடித்தமையே காரணம் என்று நேற்றைய கூட்டத்தில் சுட்டிக்காட் டப்பட்டது.
ஆகவே, இந்த நெருக்கடி நிலையில் “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டுக் குப் போ’ என்று கோருவதைவிட நிறை வேற்று அதிகார ஆட்சி முறைமை ஒழிக் கப்பட வேண்டும் என்பதே முக்கிய கோரிக் கையாக இருக்க வேண்டுமென்று தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானித்தார்கள்.
இந்த ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தும் கூட்டறிக்கை ஒன்றை தமிழ் மக்கள் சார்பில் வெளியிடுவது பற்றியும் பேசப்பட்டது. இன்று கட்சித் தலைவர்கள் கூடி அது தொடர்பான அறிக்கையைத் தயார் செய்வார்கள் என முடிவு செய்யப் பட்டது. நேற்றைய கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் கூட்டத்தின் முடிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு எடுத்துக் கூறப்பட்டது என்றும் – அவர் இன்று ஐந்து கட்சிகளினாலும் தயாரிக்கப்படும் கூட்டறிக்கையில் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவராக ஒப்ப மிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் – இதனால் இன்று வெளியாகக் கூடிய கூட்டறிக்கை தமிழர் தரப்பின் ஒரே நிலைப் பாடாகப் பிரதிபலிக்கும் என்றும் நேற்றைய கூட்டத்துடன் தொடர்புடைய தரப்புக்கள் தெரிவித்தன.