
வாஷிங்டன், ஏப் 09
உக்ரைன் மீது ரஷ்யா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான இந்த போரில் உக்ரைன் வெற்றிபெற நாங்கள் விரும்புகிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க ராணுவ தலைமையகமாக பென்டகனின் செய்தித்தொடர்பு செயலாளர் ஜான் கிர்பி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையை பாதுகாப்பதற்காக உக்ரைன் 8 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் இந்த போரில் உக்ரைன் வெற்றிபெற வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். இந்த போரில் புதினும், ரஷ்யாவும் தோல்வியடைவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். உக்ரைனிய மக்களின் உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புகிறோம்.