
கொழும்பு, ஏப் 09
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாளைய தினம், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, நாளைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகிறது.
இந்தநிலையில் கையெழுத்துகள் பெறப்பட்டதன் பின்னர் அதனை சபாநாயகருக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்றத்திலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் அரசாங்கத்திற்கு 113 என்ற பெரும்பான்மை இல்லை என்பதை வெளிப்படுத்துவதே தங்களது பிரதான நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.