இந்திய மீனவர்களின் விடுதலைக்காக ராமேஸ்வரத்தில் போராட்டம்

இராமேஸ்வரம், ஏப் 09

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் 23-ல் கடலுக்குச் சென்ற அந்தோணி எடிசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை கைப்பற்றி, அதில் இருந்த லிவிங்ஸ்டன், மிஷோ, மரியடென்ஸ்டைன், சிமியோன், ரேபர்டுகிளாபி, கெல்மன்ராஜ், சகாய சுபாஷ், ஜெபமாலை நிஜந்தன், கிளின்டன், நிலன், சந்தியா, பிரகாஷ் ஆகிய 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ரோந்துபணியின்போது கைது செய்தனர்.

12 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டுதல், அனுமதியின்றி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிபதி மீனவர்களை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு மீனவருக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.2 கோடி பணம் செலுத்த வேண்டும் என்றும், பணம் செலுத்தி பிணை பெறும் மீனவர்கள் மீண்டும் மே 12 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பின்னர் மீனவர்கள் 12 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்காக இலங்கை நீதிமன்றம் பிணையத் தொகை அறிவித்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்கள் கடலில் இறங்கி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *