யாழ். கொக்குவிலில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் அன்னை பூபதியின் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வானது மேற்குறிப்பிடப்பட்ட அலுவலகத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் செல்வராசா கஜேந்திரகுமாரால் அன்னை பூபதிக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் மீதான இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இந்த நினைவேந்தல் நிகழ்வு தொடர்ச்சியாக தமிழ் மக்களால் நினைவு கூறுகின்ற உரிமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்தின் இந்த திட்டமிட்ட இன அழிப்பிற்கான நீதியினை பெற்று தருமாறு சர்வதேசத்திற்கு வலியுறுத்துகின்ற வகையிலே இந்த நினைவு கூறல் இடம்பெறுகிறது .
இலங்கை அரசாங்கம் 13 ஆம் இலக்க சட்டத்தினை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கேற்ப பயன்படுத்தி தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க கடந்த காலங்களில் இருந்து இதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
தமிழர்களின் உரிமை ஒதுக்கக்கப்பட்ட நிலைமையிலேயே ஜனநாயக முறையில் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் போராடிய போது, இதனை அரசாங்கம் ஏற்காமல் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி அதனை அழிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டது.
எனவே, அரச கட்டமைப்பிலுள்ள 13 ஆம் திருத்த ஒற்றையாட்சியினை நிராகரித்தது. சமதேசம் என்ற அடிப்படையில் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழர்களின் உரிமை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடக தீர்வினை பெற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
எதிர்வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சமூக தமிழ் அமைப்புக்கள் ஒன்று திரண்டு ஓரணியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பான கலந்துரையாடலை முல்லைத்தீவு நகரப்பகுதியில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் திகதி நடத்துவதற்கான ஆலோசனைகள் முன்னெடுத்து வருகின்றன.
மேலும் இலங்கை அரசாங்கம் ஏனைய நாடுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து கடன்களை பெற்று நாட்டினை அதாள பாதாளத்திற்குள் தள்ளியுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடியில் சிங்கள மக்களும் சிக்குண்டு அரசாங்கத்தினை விரட்டுவதற்காக போராட்ட்ங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்- என்றார்.
இதேவேளை, இதனை அரங்கம் ஏற்றுக்கொண்டு பதவி விலகி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார்.
