இலங்கையில் மருத்துவ நெருக்கடி; 140 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில் மருத்துவ நெருக்கடி நிலையும் தீவிரமடைந்து வருகிறது.

மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் பாரதூரமான சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய ஐந்து நடவடிக்கைகள் குறித்து சுகாதார செயலாளருக்கு அறிவிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டில் தற்போது நிலவும் மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு வைத்தியசாலை நடவடிக்கைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று உயிர்காக்கும் மருந்துகளுக்கும் 140 அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை மற்றும் வழங்கல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாரடைப்பு நோயாளிகளுக்கு இரத்தத்தை கறைக்கும் streptokinase மற்றும் tenecteplase ஆகிய மருந்துகளும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகளில் அடங்கும்.

உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளும் வைத்தியசாலைகளில் இல்லை என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.

விபத்து சந்தர்ப்பங்களில் உயிர் இழப்பைத் தடுக்க பயன்படுத்தப்படுகின்றன. ஐ.சீ குழாய்கள் (IC குழாய்) மற்றும் இண்டர்கோஸ்டல் குழாய் மற்றும் சிறுநீர்க்குழாய் பற்றாக்குறை உள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின் மற்றும் வலி நிவாரணியான மோர்பின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இந்த பாரதூரமான சுகாதார அபாயத்தைக் கடப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய ஐந்து நடவடிக்கைகள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுகாதாரச் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

இரத்மலானையில் உள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலை வளாகம் மற்றும் உற்பத்திப் பிரிவிற்கு முன்னால் அதன் ஊழியர்கள், மருந்து தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வைக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருந்து தட்டுப்பாடு குறித்து வைத்தியசாலை ஊழியர்கள் நேற்றும் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றைய தினம் (09) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

விலங்குகளுக்கான உணவுப் பொருட்களின் விலையேற்றம், மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட கால்நடைத் துறையின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களுக்கு நேற்று (08) முதல் அமுலாகும் வகையில் 20 சதவீதம் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *