
புதிய தொழில் முயற்சிகளுக்கும் ஆக்கச் செயற்பாடுகளுக்கும் பல்கலைக்கழகம் உறுதுணையாக நிற்கும் என லிற்றில் சை-கிட் வெளியீட்டில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சற்குணராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
லிற்றில் எய்ட்டின் முயற்சிகளைப் பாராட்டியதுடன் இவ்வாறான ஆதரவும் உந்து சக்தியும் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
பில் கேற்ஸ், ஸ்ரீவ் ஜொப்ஸ் கூட சிறியளவில் ஆரம்பித்தே பெரிதாக வளர்ந்தனர். கலைநீதனும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழில்நுட்பவியலாளனாக வருவார் என நம்பிக்கை வெளியிட்டார்.
விஞ்ஞான கணிதத் துறையில் மணவர்களை ஈர்க்கும் லிற்றில் சை-கிட் வெளியீடு இன்று கிளிநொச்சி லிற்றில் எய்ட் மையத்தில் நடைபெற்றது. பேராசிரியர் சற்குணராஜா நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத காரணத்தால் காணொளிப் பதிவாக தன் செய்தியைப் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளரும் சமூக சேவகியுமான சுவர்ணா நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அற்புதராஜாவுடன், யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கதிர்காமநாதன் மற்றும் அவரது துணைவியார் கலாநிதி கல்யானி கதிர்காமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.