
அம்பாறை – மருதமுனை கடற்கரையில் வைத்து கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரிடமிருந்து மொத்தமாக 23,820 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மருதமுனையிலிருந்து காத்தான்குடிக்கு கடத்தி வரப்படத் தயாரான போதே குறித்த தொகை கேரள கஞ்சாவும் பணமும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் இஸ்மாயீல் புரம், வளாத்தப்பிட்டி எனும் முகவரியைச் சேர்ந்த 40 வயதுடையவரும் பீச் றோட், பெரிய நீலாவணை, மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபருமாவர்.
இவர்கள் இருவரும் சான்றுப் பொருளுடன் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.