
கிளபென்பேக், ஏப் 9
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி கிளபென்பேக் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையிலிருந்து கிண்ணியா நோக்கிப் பயணித்த கனரக வாகனமும் கிண்ணியா பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ரத்னகலாவதி (72வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த வயோதிபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.