
கொழும்பு, ஏப் 10
எதிர்வரும் சித்திரப்புத்தாண்டை முன்னிட்டு, பட்டாசு மற்றும் கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள், குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக, உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் தெரிவிக்கின்றனர்.
மூலப்பொருட்களின் விலைகளுடன் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இதற்கு காரணமாகும் என கிம்புலாபிட்டியில் சிறிய அளவில் பட்டாசு மற்றும் கேளிக்கை வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவற்றை உற்பத்தி செய்வதற்கு அவசியமான வெடிமருந்துகள் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு, பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள், தற்போது பலர் தங்களது தொழிற்றுறையை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
ஆரம்ப காலங்களில் பெரும்பாலானோர் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டனர்.
எனினும் தற்போது ஒரு சிலர் மாத்திரமே இந்த தொழிற்றுறையில் ஈடுபடுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.