கொழும்பு, ஏப் 10
தமிழக முதல்வரின் உதவிக் கரங்கள் இன வரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டில் வடக்கு – கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்க தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் முன்வந்துள்ளார்.
அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசும்போது இதற்கான மத்திய அரசின் அனுமதியை அவர் கோரினார்.
இந்நிலையிலேயே தமிழக முதல்வரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும் நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்வரின் சமூகநீதி கரங்கள் இன வரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டுமென கோருகிறோம் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
