ஆனமடுவ – குருநாகல் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து வாகன சாரதிகள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
கடந்த 10 நாட்களாக தமக்கு எரிபொருள் வழங்கப்படாமையை கண்டித்தே சாரதிகள் பிரதான வீதியை மறித்து வாகனங்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனமடுவ – குருநாகல் வீதியிலுள்ள குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் விநியோகிக்கத் தவறியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனால் தமது வாகனங்களுக்கு டீசல் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஐந்தாறு நாட்கள் அங்கேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
டீசலை பெற்றுக்கொள்வதற்கு தாம் ஏற்கனவே பணம் செலுத்தியுள்ள போதிலும் இதுவரை டீசல் வழங்கப்படவில்லை என எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதன்போது அங்கு வருகை தந்த ஆனமடுவ பொலிஸார், பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவும் இதுபற்றி பேசி முடிவெடுக்கலாம் என ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறிய போதிலும், அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுப்பட மறுத்துவிட்டனர்.


