
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது அமெரிக்க பயணத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் முன்னர் அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
அதன் பின்னர் கலிபேர்னியாவில் உள்ள தனது வீட்டுக்கு செல்லவும் திட்டமிட்டிருந்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கான தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, டொலர் கையிருப்பு பற்றாக்குறை என்பன காரணமாக நாட்டில் எரிபொருள், சமையல் எரிவாயு உட்பட அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மின்சாரமும் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்த பசில் ராஜபக்ச உட்பட அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.
புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அலி சப்றி, திறைசேரியின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் 11 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திற்கு விஜயம் செய்ய உள்ளனர்.